Saturday, 21 September 2019

அகந்தை என்பது என்ன?


Related image
அகந்தை என்பது என்ன?

வெளி உலகத்தில் இருக்கும் எல்லா பொருள்களையும் உயிர்தான் பார்க்கிறது.
உயிருக்கு உதவி செய்யும் கருவிகள்தான் மனமும், புலனும், பொறிகளும் ஆகும்.
இந்த கருவிகளையே உயிராக எண்ணுவதுதான் அகந்தையாகும்.
அகம் என்ற அறிவு சிதைந்துபோன தந்தையான ஒரு நிலையைத்தான்.
இந்த அகந்தைதான் ஆணவம் ஆகும்.
ஆணவம் என்பது உண்மையான  உயிரை அதாவது ஆன்மாவை மனமாகவும், புலன்களாகவும் தோன்றும்படி செய்வது.
ஆன்மாதான்  உண்மையான எல்லாவற்றையும் பார்ப்பது. இதுதான் இயற்கையான உண்மை ஆன்மாவாகும்.
மனதையும், புலன்களையும், பொறிகளை ஆன்மா என்று எண்ணுவது செயற்கையான ஆன்மாவாகும். இது வெறும் கற்பனை.
அறியாமையிலிருந்து விடுபடும் வரையில் ஆணவம்தான் ஆன்மாவாக நடிக்கிறது. அதை நாமும் உண்மை என்று எண்ணி தவறு செய்து கொண்டிருக்கிறோம்.
நான் என்ற உணர்வு இரண்டு வகையில் தோன்றுகிறது.
முதல் வகையான நான் என்பதுதான் ஆன்மாவாகிய உயிரை குறிப்பது.
மற்றது கற்பனையாக சொல்லும் நான் என்பது.இதிலிருந்து விடுதலை பெறுவதுதான், ஆணவத்தில் இருந்து நாம் விடுதலை பெறுவதாகும்.

ஆணவத்தில் இருந்து விடுதலை பெற்றால்தான் நாம் உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ள முடிகிறது.
ஆணவத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்படி?
             யோகா சாத்திரத்தின் முழு நோக்கமும் ஆணவத்திலிருந்து நம்மை விடுவிப்பதுதான்.
             அப்படி ஆணவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு யோகா பயிற்சி எப்படி உதவுகிறது?
             இதை ஒரு எழுத்தை மற்றொரு எழுத்தாக எப்படி மாற்றுவது என்பதை  தெரிந்துகொள்வதன் மூலமாக உணர்ந்து கொள்ளலாம்.
              'க', 'க்', என்ற இரண்டு எழுத்துக்கும் மேலெழுந்த வாரியாக பார்த்தால் ஓரே மாதிரியாகத்தான் தோன்றுகின்றன.
                சற்று கூர்ந்து பார்த்தால் அவற்றில் ஒரு எழுத்தின்மீது ஒரு புள்ளி இருப்பதை பார்க்கலாம்.
                அந்த புள்ளி என்ன செய்கிறது? ஒரு மாத்திரை ஒலி அளவுடைய  'க' என்ற எழுத்தின் மீது புள்ளியை வைத்தால், அது, அரை மாத்திரை ஒலி அளவுடன் கூடிய 'க்' என்ற எழுத்தாக மாறிவிடுகிறது.
                'க்' என்ற எழுத்தின் மீது இருக்கும் புள்ளியை எடுத்து விட்டால் அதுவே ஒரு மாத்திரை ஒலி அளவை உடைய 'க' என்ற எழுத்தாக மாறிவிடுகிறது.
                  இதைப்போலவே நான் என்ற சொல் உயிரையே குறிப்பிடவேண்டும். அப்படி குறிப்பிடாமல் புலன் பொறிகளை மனதையும் குறிப்பிட நேர்வது எப்படி?
                  உயிர் அதாவது ஆன்மா வேறு. ஆன்மா பயன்படுத்தும் கருவிகள் வேறு என்பதை தவறாக புரிந்து கொள்வதால்தான் இந்த வேறுபாடு ஏற்படுகிறது.
                  இந்த தவற்றைத்தான் அறியாமை என்றும், ஆணவம் என்றும் சொல்கிறோம்.
                  அறியாமையையும், ஆணவத்தையும் நீக்குவதற்கு புலன் பொறி என்ற செயற்கை புள்ளியை நீக்கிவிட வேண்டும்.
                 இதற்கு யோகா பயிற்சியில் பல படிகளை அமைத்திருக்கிறார்கள்.
                  அதில் ஏழாவது படியாகிய தியானத்தில் வெற்றி பெற்றவுடன் செயற்கையான ஆணவம் போய்விடுகிறது. இயற்கை உண்மையான  சமாதி நிலை கூடுகிறது.
                 இப்போது உயிராகிய ஆன்மாவை, ஆன்மாகவே அறிந்து கொள்கிறோம்.
                 இதைதான், "கரணம் எலாம் கரைந்த தனிக்கரை காண்பது உளரோ? கரைகண்டபொழுது எனையும் கண்டு தெளிவேனோ?" என்று தம் ஞானயோக அனுபவத்தை பற்றி சொல்கிறார் திருஅருட்ப்ரகாச வள்ளலார். 



No comments:

Post a Comment